ரோஹித் சர்மாதான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று (சனிக்கிழமை) அறிவித்தது. டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதன்பிறகு, காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த சேத்தன் சர்மா கூறியதாவது:
"ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை அவர்தான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர். அவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறார். ரோஹித்தை எப்படிக் கையாள்கிறோம் என்பது முக்கியம். ரோஹித்திடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டை வழிநடத்துவதற்கு ரோஹித் எங்களது தெளிவான தேர்வு. அவரை கேப்டனாக அறிவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே.
இதையும் படிக்க | இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: நான்கு மூத்த வீரர்கள் நீக்கம்
இதுபோன்ற மிகப் பெரிய கிரிக்கெட் வீரர் அணியை வழிநடத்தும்போது, மேற்கொண்டு கேப்டன்களை உருவாக்கவும் ஒரு தேர்வுக் குழுவாக நாங்கள் விரும்புகிறோம். ரோஹித் தலைமையின் கீழ் அவர்களை உருவாக்குவது மிகச் சிறந்தது.
ரோஹித் நீண்ட நாள்களுக்கு அணியை வழிநடத்தினால், அது அணிக்கு நல்லது. எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளவரை அவரே டெஸ்ட் கேப்டன். அவருக்கு ஓய்வு தேவைப்படும்போது ஓய்வு வழங்கப்படும்" என்றார்.
இலங்கை தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கேஎஸ் பரத், ரவிச்சந்திரன் அஸ்வின் (உடற்தகுதியைப் பொறுத்து), ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.