தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மோசமாக விளையாடி ஆட்டமிழந்த ரிஷப் பந்தை முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் புஜாரா ரஹானாவும் அரை சதங்கள் எடுத்த நிலையில் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் 161 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விஹாரி 6, ஷர்துல் தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
இன்று, ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ரபாடாவின் பந்தை முன்னேறி வந்து அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் ரிஷப் பந்தின் ஆட்டத்தை விமர்சித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர் கூறியதாவது:
ஆடுகளத்தில் இரு புதிய பேட்டர்கள் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அப்படியொரு ஷாட்டை விளையாடுகிறார் ரிஷப் பந்த். அந்த ஷாட்டுக்கு மன்னிப்பே கிடையாது. அதுதான் அவருடைய இயற்கையான ஆட்டம் என்கிற அபத்தம் எல்லாம் தேவையில்லை. இங்கு பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும். புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் பந்தால் அடிவாங்கியபடி விளையாடினார்கள். நீங்களும் போராட வேண்டும். நான் சொல்கிறேன், (இப்படி விளையாடினால்) ஓய்வறையில் ஆதரவான வார்த்தைகள் உங்களுக்குக் கிடைக்காது என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று முதல் ரிஷப் பந்த் மோசமாகவே விளையாடி வருகிறார். 13 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார்.
தெ.ஆ. அணியை மீட்டு வந்த ரபாடா: அரை சதங்கள் எடுத்து ஆட்டமிழந்த புஜாரா, ரஹானே
டெஸ்டில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்த வங்கதேசம்: ஹைலைட்ஸ் விடியோ
மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள்: ஆஸ்திரேலியா 126/3
நியூசிலாந்தில் டெஸ்ட் வெற்றி: வங்கதேச அணி நிகழ்த்திய சாதனைகள்
பிரபல ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கரோனா
முதல் டெஸ்ட்: நியூசிலாந்தில் வரலாற்று வெற்றியை அடைந்த வங்கதேச அணி