ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஆரம்பக்கட்டப் பட்டியலை 10 அணிகளுக்கும் அனுப்பியுள்ளது பிசிசிஐ. அந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும். அந்தப் பட்டியல் ஏலம் நடைபெறும் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும்.
2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இரு அணிகளும் தேர்வு செய்த வீரர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10 அணிகளுக்கும் பிசிசிஐ அனுப்பிய வீரர்கள் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. மிட்செல் ஸ்டார்க், சாம் கரண், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் கெயில், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகிய டி20 பிரபலங்கள் ஏலத்தில் இடம்பெறுவதற்காகத் தங்கள் பெயரைக் கொடுக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்துவது உள்பட பல காரணங்களுக்காக இவர்கள் 2022 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.