வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.
சிட்னியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ. அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. நடுவரிசை பேட்டர் ரூசோவ் 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து அசத்தினார். குயிண்டன் டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
கடந்த நான்கு ஆட்டங்களில் இரு முறை அடுத்தடுத்து டக் அவுட் ஆன ரூசோவ், கடந்த இரு ஆட்டங்களிலும் சதமடித்துள்ளார். இந்தூரில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்த ரூசோவ், அடுத்து பேட்டிங் செய்த சர்வதேச ஆட்டத்திலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் முழு உறுப்பினர்களாக உள்ள நாடுகளைச் சேர்ந்த வீரர்களில் அடுத்தடுத்த டி20 ஆட்டங்களில் சதங்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.
கடினமாக இலக்கை எதிர்கொண்ட வங்கதேச அணி, 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது தென்னாப்பிரிக்க அணி. வேகப்பந்து வீச்சாளர் நோர்கியா 4 விக்கெட்டுகளும் ஷம்சி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.