தன்னுடைய ஹோட்டல் அறையைப் படமெடுத்து சமூகவளைத்தளத்தில் வெளியிட்ட ரசிகருக்கு விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் பெர்த் நகரில் விராட் கோலி தங்கிய ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட காணொளியை ரசிகர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த அறையில் கோலி இல்லாத போது எடுக்கப்பட்ட விடியோ என்பதாலும் கோலியின் சம்மதமின்றி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டதாலும் இதுகுறித்த தங்களுடைய கோபத்தை கோலியும் அனுஷ்கா சர்மாவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கோலி கூறியதாவது:
தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து ரசிகர்கள் குஷியாவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வீரர்களைச் சந்திக்க ரசிகர்கள் ஆர்வம் கொள்வதை நான் எப்போதும் வரவேற்றுள்ளேன். இந்தக் காணொளி அச்சுறுத்த வைக்கிறது. என்னுடைய தனியுரிமை குறித்து அச்சம் ஏற்படுகிறது. என்னுடைய ஹோட்டல் அறையில் எனக்குத் தனியுரிமை இல்லையென்றால் எனக்கான வெளியை எங்குக் கண்டடைவது? இதுபோன்ற வெறித்தனம் எனக்கு ஏற்புடையதல்ல. என்னுடைய தனியுரிமை மீதான தாக்குதல் இது. மக்களின் தனியுரிமையை மதியுங்கள். அவர்களைப் பொழுதுபோக்குப் பண்டமாகப் பார்க்க வேண்டாம் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கோலியின் மனைவியும் பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா கூறியதாவது:
ரசிகர்கள் மனிதாபிமானமின்றி நடந்துகொண்ட சில சம்பவங்கள் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமானது. இது உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால் இதற்கான எல்லைக்கோடு எது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.