கடந்த 3-4 மாதங்கள் மனதளவில் மிகவும் சவாலானதாக இருந்ததாக இந்திய அணியின் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவு செய்த சஞ்சு சாம்சன் இதனை தெரிவித்தார். நேற்றையப் போட்டியில் சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
நேற்றையப் போட்டிக்குப் பிறகு சஞ்சு சாம்சன் பேசியதாவது: கடந்த 3-4 மாதங்கள் எனக்கு மனதளவில் மிகவும் சவாலானதாக இருந்தது. இத்தனை நாள்களாக பல சவால்களை கடந்து வந்து சதமடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது ஜீன்களில் கிரிக்கெட் உள்ளது. என்னுடைய தந்தையும் விளையாட்டு வீரர். எத்தனை தடைகளை சந்தித்தாலும், உங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டு தொடர்ந்து உங்களது உழைப்பைக் கொடுத்தால் மிகவும் வலிமையாக உங்களால் மாற முடியும்.
நேர்மையாக கூறவேண்டுமென்றால், ஸ்கோர் என்ன என்பதை நான் பார்க்கவில்லை. நான் திலக் வர்மாவுடன் இணைந்து பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடுவதில் கவனம் செலுத்தினேன். நாங்கள் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்தியதால் அணியின் ஸ்கோர் தானாக உயர்ந்தது என்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.