
ஆஷஸ் 4-வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து தனது முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 592 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இங்கிலாந்து 275 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா நான்காம் நாளான நேற்று (ஜூலை 22) ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் 31 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய ஆட்டம் மழையால் தாமதமானது. இந்த நிலையில், இன்றைய கடைசி நாள் ஆட்டமும் தாமதமாக தொடங்கவுள்ளது. ஆட்டம் 20 நிமிடம் தாமதமாக தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மழை நிற்காததால் போட்டி தொடங்குவதற்கு மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி எப்போது சரியாக தொடங்கும் எனக் கூறப்படவில்லை. இதனால் இன்றைய ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓவர்கள் குறைந்த அளவு மட்டும் வீசுவது போல் நடத்தப்பட்டால் ஆட்டத்தில் சுவாரசியம் இல்லாமல் போகும் என்பதே ரசிகர்கள் கவலையாக உள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்த ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று 2-2 என சமன் செய்யும் பட்சத்தில், 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.