இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவரை பெரும்பாலான ஆட்டங்கள் ஒரு பக்கமாகவே சாய்ந்துவிட்ட நிலையில், 2 ஆட்டங்கள் மட்டுமே விறுவிறுப்பானதாக இருந்தன. அதில் ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிராக 1 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது. மற்றொன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூஸிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது.
எனவே, அந்த நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடைசி இரு ஆட்டங்களில் தோற்ற நியூஸிலாந்து, அரையிறுதி முனைப்புடன் ஹாட்ரிக் தோல்வியை தவிா்க்க முயற்சிக்கும். ஒருவேளை நியூஸிலாந்து தோற்றால், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுக்கு அது சாதகமாக அமையும். தென்னாப்பிரிக்கா வெல்லும் பட்சத்தில் இந்தியாவைப் போலவே அரையிறுதி வாய்ப்புக்கு மிக நெருக்கமாக வந்துவிடும்.
இந்நிலையில், புணேவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டிக்காக்கும் டெம்பா பவுமாவும் நிதானமான ஆட்டத்தைத் தொடங்கினர். இருப்பினும், 24 ரன்களில் இருந்தபோது டெம்பா ஆட்டமிழந்தார். அதற்குப் பின் களமிறங்கிய வான் டர் துசெனும், குயின்டனும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர்.
ஏற்கனவே, இந்தத் தொடரில் 3 சதங்களைப் பதிவு செய்த குயிண்டன் டிகாக் இந்த ஆட்டத்தில் 4 சதத்தைப் பதிவு செய்து 114 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய வான் டர் டசனும் சதமடித்து 133 ரன்களில் விக்கெட் ஆனார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களுக்கு 357 ரன்களைத் தெ.ஆ. அணி குவித்தது. 358 ரன்களை இலக்காக எடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.