இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 தொடருக்கான மினி ஏலம் வரும் டிச. 19-ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணிக்கு நிகழாண்டு ஏலத்துக்காக ரூ.100 கோடி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் இது மூன்றாவது மற்றும் இறுதி 3 ஆண்டுகள் ஒப்பந்தமாக அமையவுள்ளது.
இதற்கிடையே அணிகள் வீரா்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் நவ. 26-ஆம் தேதி மாலை 5 மணி அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படுவார் என்று அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அணியிடம் ரூ.23.15 கோடி கையிருப்பு உள்ளது.
இதையும் படிக்க : ஐபிஎல்: மும்பை அணிக்கு திரும்பினார் ஹாா்திக் பாண்டியா
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஷுப்மன் கில், “குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகுவதற்கு நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். இவ்வளவு அற்புதமான அணியை வழி நடத்த என் மீது நம்பிக்கை வைத்துள்ள அணியின் நிர்வாகத்துக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. இதை மறக்க முடியாததாக மாற்றுவோம்.
அனைத்து ரசிகர்களுக்கும்...ஆவா டி. (குஜராத் மொழியில் -கொண்டு வருவோம்)” எனப் பதிவிட்டுள்ளார். கோப்பையை கொண்டு வருவோம் என சூசகமாக பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.