உலக சாம்பியனை வீழ்த்தி தமிழக வீரர் சாதனை!
கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்செனை எதிர்கொண்ட இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்மூலம் கார்த்திகேயன் முரளி கார்ல்செனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இன்னும் 2 சுற்றுகள் மீதமிருக்கும் நிலையில், தற்போது 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிக்க: இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்!
இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய 5-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கார்த்திகேயன் முரளி. இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, பிரக்ஞானந்தா, விதித் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கார்ல்செனை வீழ்த்தியுள்ளனர்.
இதில் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மற்றும் கார்த்திகேயன் முரளி ஆகிய மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.