ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இலங்கை முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே களமிறங்கினர். திமுத் கருணாரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் குசல் மெண்டிஸ் களமிறங்கினார். நிசங்கா மற்றும் கேப்டன் குசல் மெண்டிஸ் நிதானமாக விளையாடினர். நிசங்கா 46 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சதீரா சமரவிக்கிரம (36 ரன்கள்), சரித் அசலங்கா (22 ரன்கள்), தனஞ்ஜெயா டி சில்வா (14 ரன்கள்), ஏஞ்சலோ மேத்யூஸ் (23 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ஸ்டார்க் சாதனையை சமன்செய்த முகமது ஷமி!
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.