உலகக் கோப்பைக்கான தனது இந்திய அணி வீரர்கள் பட்டியலை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ள இந்திய அணி கிட்டத்தட்ட ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி போன்று உள்ளது. சில வீரர்கள் மட்டுமே வித்தியாசமான தேர்வாக உள்ளனர். சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் வாசிம் ஜாஃபரது தேர்வில் இடம்பெறவில்லை. மாறாக, காயத்திலிருந்து மீண்டும் அணிக்குத் திரும்பிய கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அவரது தேர்வில் இடம்பெற்றுள்ளனர். ஆச்சர்யமளிக்கும் விதமாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகாத திலக் வர்மாவும் அவரது அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சில் குல்தீப் யாதவை தேர்வு செய்துள்ள அவர் யுஸ்வேந்திர சஹாலுக்கு அவரது அணியில் இடமளிக்கவில்லை.
உலகக் கோப்பைக்கான தனது இந்திய அணியாக வாசிம் ஜாஃபர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ்.
உங்களுடைய இந்திய அணி என்ன? எனப் பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பைக்கான அணி விவரங்களை நாளைக்குள் (செப்டம்பர் 5) ஐசிசியிடம் அனைத்து அணிகளும் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் அணியில் வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி வரை அணிகள் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.