
ரோஹித் சர்மாவுடன் இணைந்து பணியாற்றியதை கௌரவமாக கருதுகிறேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இதன் மூலம், பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்தியாவின் ஐசிசி கோப்பைக்கானத் தேடல் முடிவுக்கு வந்தது.
டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து விலகுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அறிவித்தனர். அவர்கள் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து பணியாற்றியதை கௌரவமாக கருதுகிறேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மிகச் சிறந்த தலைவர். அவருடன் இணைந்து பணியாற்றியதை கௌரவமாக கருதுகிறேன். இந்த இரண்டரை ஆண்டுகளில் அவர் மிகச் சிறந்த தலைவராக அணியை வழிநடத்தியுள்ளார். அவரது சிறந்த தலைமைப் பண்பினால் அவரை நோக்கி அணியில் உள்ள வீரர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். விராட் கோலி, பும்ரா மற்றும் அஸ்வின் போன்ற மூத்த வீரர்களும் சூப்பர் ஸ்டார்களாக வலம் வருகின்றனர். அவர்களை பலரும் பின் தொடர்கின்றனர். இவர்கள் அனைவரும் மிகவும் பணிவானவர்கள். அதன் காரணமாகவே அவர்கள் சிறந்த வீரர்களாக உள்ளனர் என்றார்.
டி20 உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக் காலம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.