ஓராண்டில் 10-15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும் என அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பல்பிர்னி தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டிகளில் அயர்லாந்து பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
இந்த வெற்றிக்குப் பிறகு அயர்லாந்து அணியின் கேப்டன் பேசியதாவது: டாஸை இழந்தபோதிலும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட் எடுப்பது பெரிய சாதனை. களத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும்போது பதற்றமாக இருந்தது. நிலைத்து ஆடினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. பலருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அயர்லாந்து வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக மாறுவதற்கு இந்த வெற்றி கண்டிப்பாக ஊக்கமளிக்கும். முதல் டெஸ்ட் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. உலக அளவில் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. நாங்கள் ஓராண்டில் 10-15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அப்படி விளையாடும் இடத்துக்கு வளரும்போது எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பல்பிர்னி 58* ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.