வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (மார்ச் 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்கிரம 61 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஜேக்கர் அலி 34 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக மஹ்மதுல்லா 31 பந்துகளில் 54 ரன்கள் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.