விராட் கோலி கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுவதற்கு உடல்தகுதியின் மீது அவர் காட்டும் ஆர்வமே காரணம் என டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தபோது வீரர்கள் முழு உடல்தகுதியுடன் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கலாசாரத்தை அவர் அணியில் ஏற்படுத்தினார். அவர் அற்புதமான வீரர். அவர் உடல்தகுதிக்கு மிகுந்த கவனம் கொடுத்து சிறப்பாக உடலினை பராமரித்து வருகிறார். உடல்தகுதிக்காக அவர் கடினமாக பயிற்சி மேற்கொள்கிறார்.
இன்றைய நவீன விளையாட்டு உலகில் நீண்ட காலம் ஒருவர் விளையாட விரும்பினால் விராட் கோலியைப் போன்று உடல்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர் அனைவருக்கும் மிகச் சிறந்த உதாரணம். இளம் வீரர்கள் தங்களது திறமையினை மட்டும் நம்பி விளையாடுகின்றனர். அவர்கள் திறமையானவர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், நீங்கள் நீண்ட காலம் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினால் உங்கள் உடல் தகுதிக்கு கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.