இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு உலகக் கோப்பையின்போது, இறுதிப்போட்டி வரையும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின்போது அரையிறுதிப்போட்டி வரை முன்னேறியது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர் எனவும், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் ரோஹித் சர்மா இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவைப்படுவதாக நினைக்கிறேன். ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன். அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர் அவர். அவரால் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுத் தர முடியும் என்றார்.