
டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பையில் பங்குபெறும் நாடுகள் தங்களை தீவிரமாக ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே செயிண்ட் கிட் மற்றும் நெவிஸை சென்றடைந்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான 10 நாள்கள் பயிற்சி முகாமை ஆப்கானிஸ்தான் அணி தொடங்கவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் இந்த பயிற்சி முகாமை டுவைன் பிராவோ உள்ளடக்கிய பயிற்சியாளர்கள் குழு கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதாகும் டுவைன் பிராவோ மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 295 போட்டிகளில் விளையாடி 6423 ரன்கள் எடுத்துள்ளார். 363 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 625 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராகவும் அவர் உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ தற்போது சிஎஸ்கேவின் பயிற்சியாளர் குழுவில் ஒருவராக உள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான், உகாண்டாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.