
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரே நியூசிலாந்து அணிக்காக தான் விளையாடும் கடைசி தொடர் என அந்த அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுகமான டிரெண்ட் போல்ட் தொடர்ச்சியாக அவரது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்காக இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமை அவரைச் சேரும். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் டிரெண்ட் போல்ட் பங்கேற்றுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடர் நியூசிலாந்து அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடமும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடமும் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குரூப் சி பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால், நியூசிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.
இந்த நிலையில், நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரே நியூசிலாந்து அணிக்காக தான் விளையாடும் கடைசி தொடர் என அந்த அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் எனது கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கும். இதைத் தவிர வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை. நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்த மாதிரியான தொடக்கத்தை கண்டிப்பாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது. நியூசிலாந்து அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடியது மிகவும் பெருமையாக உள்ளது. இத்தனை ஆண்டுகளில் நியூசிலாந்து அணி பல சாதனைகள் படைத்துள்ளது. துரதிருஷ்டவசமாக, கடந்த 2 வாரங்கள் நியூசிலாந்து அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை என்றார்.
நியூசிலாந்து அணி நாளை மறுநாள் (ஜூன் 17) பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.