/

அதிமுகவை சிறப்பாக வழிநடத்த விரும்புகிறேன்

அதிமுகவை சிறப்பாக வழிநடத்த விரும்புவதாக அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:34 pm

DIN

அதிமுகவை சிறப்பாக வழிநடத்த விரும்புவதாக அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அந்நியச் செலாவணி வழக்குத் தொடர்பாக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது: கட்சியின் பொதுச்செயலாளர் செயல்பட முடியாமல் இருக்கிறார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அவரால் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எனக்கே பொதுச் செயலாளருக்கு உரிய அதிகாரங்கள் உள்ளன.
கட்சியின் தொண்டனாக, துணைப் பொதுச் செயலாளராக நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கட்சியை வழி நடத்திச் செல்லும் முழு அதிகாரமும் எனக்கே உள்ளது. 60 நாள்கள் பொறுத்திருக்கப் போவதாக நான் கூறி இருந்தேன். அந்தக் கெடு வரும் 4-ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு இன்னும் 2 நாள்களே உள்ளன. அதன் பின்னர் எனது செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை நீங்களே பார்த்து அறிவீர்கள். அதுவரை பொறுத்திருங்கள்.
சிறப்பாக வழிநடத்த.... கட்சியைச் சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கட்சியின் நலனுக்காகவே செயல்பட உள்ளேன். யாரையும் நான் எதிரியாகப் பார்க்கவில்லை.
2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலைக் குறிவைத்தே கட்சிப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். எனது நடவடிக்கைகள் அனைத்தும் இனி கட்சி நலன் சார்ந்தே இருக்கும் என்றார் டிடிவி தினகரன்.
கேள்வி: ஆட்சியையும், கட்சியையும் எடப்பாடி பழனிசாமியே வழி நடத்துகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?
பதில்: ஏதோ ஒரு பயத்தில் அவர் இதுபோன்று தொடர்ந்து பேசி வருகிறார். எல்லாம் சரியாகிவிடும். பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்துவதே எனது முதல் பணி. அந்தப் பணியை நான் தொடர்ந்து மேற்கொள்வேன். ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குப் பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும்.
கேள்வி: நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் விவகாரம் தொடர்பாக...
பதில்: இதில் தமிழக அரசு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதில் வெற்றி பெற வேண்டும்.
இன்று பெங்களூரு பயணம்
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதன்கிழமை (ஆக. 2) பெங்களூரு செல்கிறார்.
அங்கு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்த அவர் முடிவு செய்துள்ளார். 60 நாள்கள் பொறுத்திருக்கும்படி சசிகலா கேட்டுக் கொண்டதால் அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் டிடிவி தினகரன் ஈடுபடாமல் இருந்தார்.
60 நாள்கள் காலக்கெடு முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சசிகலாவிடம், டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக பெங்களூருக்கு அவர் புதன்கிழமை செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.