தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் இல்லத்தில் சு.திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ப.சிதம்பரத்தை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மட்டும் நடைபெறும் ஒன்றல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தில்லி தலைமைக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் அரசியல் கருத்துகள் வைப்பது ஒன்றும் தவறில்லை. தமிழக அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசரை மாற்ற அகில இந்திய தலைமையை வலியுறுத்த வேண்டும் என்று ப.சிதம்பரத்தைச் சந்தித்து தமிழகத் தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்தே ப.சிதம்பரத்தைச் சந்தித்து திருநாவுக்கரசர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.