சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் சென்னைக்கு வடகிழக்கே 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் தற்பொழுது உச்ச உயர் தீவிரப் புயலாக சென்னைக்கு வடகிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து, மே 3ம் தேதி ஒடிஸா மாநிலம் புரி அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். மீனவர்களைப் பொறுத்தவரை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மே 3ம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாயப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புயல் தமிழகத்தைக் கடந்து சென்ற பிறகு வறண்ட வானிலையே காணப்படும்.
மே 4ம் தேதிக்குப் பிறகு கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறையலாம். உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.