அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் புறவழிச்சாலையில் உள்ள அருள்மிகு சீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலையில் உள்ள அருள்மிகு சீரடி சாய்பாபா கோவிலில் வாரந்தோறும் குரு மகிமையும், அருள்மிகு தத்தாத்ரேயர் மற்றும் தஷிணாமூர்த்தி அம்சங்களும் நிறைந்த வியாழக்கிழமை நன்னாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இதன்படி கார்த்திகை மாத வியாழக்கிழமை காலை ஆரத்தியைத் தொடர்ந்து நண்பகலில் நடைபெறும் பகல் ஆரத்தி வழிபாடு அன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. அப்போது பல்வேறு வித மலர்கள் மற்றும் மலர் மாலைகளையும், அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, இனிப்புகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பொருட்களையும் அருள்மிகு பாபாவிற்கு பக்தர்கள் படைத்து வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
உடன் அருள்மிகு பாபாவிற்கு உகந்த பக்திப் பாடலைப் பாடியபடி பக்தர்கள் வழிபட, தீப, தூப ஆரத்தியும், மலர்களால் அர்ச்சித்து, உணவு படைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டு நிறைவில் பக்தர்களின் வேண்டுகோள் நிறைவேறவும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு 3 நிமிட தியானமும் நடைபெற்றது.
பின்னர் வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மலர் பிரசாதம் மற்றும் அன்னதானம் அளிக்கப்பட்டது. இவ்வழிபாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர்.