கோயில் உண்டியல்களைத் திறக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில் உண்டியல்களைத் திறந்து காணிக்கை விவரங்களை உடனடியாக தாக்கல் செய்ய கோயில் உதவி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊதியம் வழங்கவும், மின் கட்டணம் செலுத்தவும், இதர செலவினங்களை மேற்கொள்ளவும் இந்த காணிக்கை பயன்படும் என்பதால் அவசர உண்டியல் திறப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும்.
பக்தர்கள் அதிகம் வரும் கோயில்களில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். பின்னர் அத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கோயில் திட்டப்பணிகளுக்கான செலவினங்களுக்கும், இதர தேவைகளுக்கும் பெரும்பாலும் இந்த காணிக்கை நிதியே பயன்படுத்தப்படும்.
கரோனா தொற்று பரவலால் மார்ச் 20-ஆம் தேதி மூடப்பட்ட கோயில்கள் இதுவரை திறக்கப்படவில்லை. நூறாவது நாளை நெருங்கி கொண்டிருக்கிறது. கோயில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர். கோயில்கள் திறப்புநாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்கிடையே அறநிலையத்துறை பணியாளர்களுக்கான ஊதியம், கோயில்களுக்கான மின் கட்டணம், இதர செலவினம் போன்றவற்றை மேற்கொள்ள நிதி நெருக்கடி உள்ளதால் கோயில்களின் உண்டியல் காணிக்கையைப் பயன்படுத்த அனைத்து உதவி ஆணையர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதனடிப்படையில் கோயில்களின் அன்னதான மண்டபங்களில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் எண்ணும் பணி சேலம் உதவி ஆணையர் உமாதேவி, நாமக்கல் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.....