கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சனிக்கிழமை 10 ஆவது நாளாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி, சிறந்த சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. அருவியில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருக்கும்.
வட கிழக்கு பருவ மழை எதிரொலியாக நவம்பர் 18-இல் சுருளி அருவியின் நீர்வரத்து ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப் பாறை மற்றும் தூவானம், வெண்ணியாறு வனப்பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்து விட்டது.
இதன் எதிரொலியாக சுருளி அருவி வனப்பகுதியில் மழை பொழிவு இல்லை.
ஆனாலும் பச்சைக்கூமாச்சி மலை பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளதால், தூவானம் அணையிலிருந்து உபரி நீர் சுருளி அருவி வழியாக வருகிறது, இதன் எதிரொலியாக அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பத்தாவது நாளாக சனிக்கிழமையும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கிழக்கு வனச்சரகத்தினர் அருவி பக்கம் யாரும் செல்லாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.