அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டும் அரசு அவசரம் காட்டுவது ஏன்? - மதுரைக்கிளை கேள்வி

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் பணி நியமனம்  செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 500 நாட்களுக்கு பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுமதி கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2018 ஆம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவமதிப்பு வழக்கும் இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இதுபோன்ற பள்ளிக்கல்வித்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக 50 சதவீத வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது அரசுத்துறையைச் சார்ந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது.  சில முக்கிய வழக்குகளில் அரசின் மெத்தனப் போக்கு காணப்படுகிறது. அரசியல் தலையீடு உள்ள சில வழக்குகள் மட்டும் துரிதப்படுத்தப் படுகின்றன.

இந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறையின் செயலர் மற்றும் இயக்குனர்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எதிர்மனுதாரராக சேர்த்துக்கொள்கிறது. தமிழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு  444 கோடி ரூபாய் ஊதியமாக அரசு வழங்கி வருகின்றது. ஆனால், அவர்களின் பணி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு அபராதம் விதிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை அலுவலருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகின்றது. இந்த அபராதத் தொகை அவரது ஊதியத்தில் அரசு பிடிமானம் செய்ய வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமலும், மேல்முறையீடு செய்வதிலும் அரசு அதிகாரிகள் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்..

கல்வித்துறை அதிகாரிகளுக்கு முறையான சட்ட ஆலோசனை கிடைக்கப் பெறாததால் இதுபோன்று நடைபெறுகின்றது. எனவே, அவர்களுக்கு முறையான சட்ட ஆலோசகர்களை தமிழக அரசு ஏன் நியமனம் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் மற்றும் இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com