சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்
Published on
Updated on
1 min read

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். 

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (டிச.19) தேரோட்டமும், திங்கள்கிழமை (டிச.20) ஆருத்ரா தரிசனமும் நடைபெறும் என கோயில் பொது தீட்சிதா்கள் அறிவித்தனா்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.11-ம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

டிச.12-ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 13-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 14-ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 15-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), 16-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 17-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 18-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற்றது.

இந்த நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் கே.ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், ஆருத்ரா தரிசன விழாவும் பக்தர்கள் அனுமதியின்றி கோயில் உள் பிரகாரத்திலேயே பக்தர்கள் அனுமதியின்றி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. 

இருப்பினும், சனிக்கிழமை கோயிலின் 5 தேர்களும் அலங்கரிக்கப்பட்டு தேராட்டத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் நடாஜர் கோயில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதி வழங்கக் கோரி பக்தர்கள், சிவனடியாா்கள், பாஜக உள்ளிட்ட கட்சியினர் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். 

இதனைத்தொடர்ந்து கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடராஜர் கோயில் தேரோட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

இந்நிலையில், நடராஜர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். சிதம்பரம் நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com