ஈரோடு: கரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்காக ஆதார் எண்ணை அளிக்கக் கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே, பொதுமக்களை, கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆதார் எண்ணை தருமாறு கேட்டு மோசடியாளர்கள் ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிக்கலாமே.. பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை
அப்படி யாரும் மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு காவல்துறை விடுத்திருக்கும் எச்சரிக்கை செய்தியில், கரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளிக்கக் கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து, ஆதார் எண்ணை அளிக்கக் கோரி, பின் உங்கள் செல்லிடப்பேசி எண்ணுக்கு ஓடிபி வரும் என்று கூறி ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு மோசடி செய்து நமது விவரங்கள், வங்கித் தொகை ஆகியவற்றைத் திருடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழக காவல்துறை கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.