வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் நிரப்பித் தர வேண்டுமென அதிகாரிகளிடம் பிச்சை கேட்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அணை பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில், உத்தமபாளையம் அணை கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகிறது. போதிய நீராதாரம் இல்லாததால், இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு அருகில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பும் திட்டம் உள்ளது. இப்பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்கால் பாசனம் தொடங்கும் அல்லது முடிவுற்ற பின்னர், பரம்பிக்குளம் - ஆழியாறு அணையில் திருப்திகரமான நீர் இருப்பு இருக்கும் பட்சத்தில் வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் வழங்கலாம் என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
தற்போது போதிய நீர் இருப்பு இருப்பதால் அதிகாரிகள் எங்களுக்கு தண்ணீர் வழங்க முன்வரவேண்டும். பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாங்களும், இப்பகுதி மக்களும் வறட்சியால் விவசாயம், குடிநிருக்குத் தவித்து வருகிறோம்.
எனவே அதிகாரிகளிடம் தண்ணீர் பிச்சை கேட்கின்றோம். அதிகாரிகள் மனது வைத்தால் நடக்கும். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.