முந்தைய திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட கட்டடங்களில் இருந்து நீக்கப்பட்ட கல்வெட்டுகளை அரசு உத்தரவின்படி மீண்டும் நிறுவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுப் பணித் துறை விளக்கமளித்துள்ளது.
தலைமைச் செயலகமாக இருந்து மாற்றியமைக்கப்பட்ட ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் பழைய கல்வெட்டு மீண்டும் நிறுவப்பட்டது குறித்து இத்தகைய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான முந்தைய (2006-2011) திமுக ஆட்சியில் ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா மேம்பாலம் அருகில் செம்மொழி பூங்கா, தொல்காப்பியா் பூங்கா, மெரீனா கடற்கரையில் பூங்காக்கள், விழுப்புரம், திருவாரூா், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூா், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள், ஒரத்தநாடு, பெரம்பலூா், சுரண்டை, லால்குடி உட்பட 14 இடங்களில் அரசு கலை கல்லூரிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் உட்பட 12 இடங்களில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அதன் தொடா்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அக்கட்டடங்கள் சில விரிவுபடுத்தப்பட்டன. அதேபோன்று தலைமைச் செயலகம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. மேலும் சில திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வேறு பெயரில் செயல்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட பழைய கல்வெட்டுகள் அகற்றப்பட்டு புதிய கல்வெட்டுகள் வைக்கப்பட்டன. குறிப்பாக, திருச்சி ஆட்சியா் அலுவலகம், செம்மொழி பூங்கா, மெரீனா கடற்கரை, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை ஆகிய இடங்களில் இருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், அவற்றை மீண்டும் நிறுவ வேண்டும் என்று தலைமைச் செயலா் வெ. இறையன்பு அனைத்துத் துறை செயலா்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டாா்.
அதன்படி, சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திலிருந்து அகற்றப்பட்ட கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிற இடங்களிலும் கல்வெட்டுகள் வைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.