சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடையதாக அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.
இதையும் படிக்கலாமே.. முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையா்களை கைது செய்யாதது ஏன்?
விசாரணையின் நிறைவில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம், ஹெரேன்பால், பாபு ஆகிய மூவரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தத்தை அதிமுகவிலிருந்து நீக்கி கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளானந்தம், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.