மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த 15 நாள்களாக இரவு பகலாக பெய்து வந்த மழை தணிந்து வெள்ளிக்கிழமை காலை கதிரவன் கண் திறந்து வெயில் முகம் தெரிந்தது.
மானாமதுரை, திருப்பபுவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்து அவ்வப்போது சாரல் மழை,பலத்த மழை, கன மழையுமாக பெய்து வந்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கண்மாய், குளம், ஊரணிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பல கிராமங்களில் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு இளையான்குடி ஒன்றியத்தில் விதைப்பு முறையில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பெய்த மழையால் முளைப்புத்திறன் கண்டுள்ளன. ஏராளமான விளை நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பல கிராமங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
மேற்கண்ட பகுதிகளில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைத்தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
மானாமதுரை நகர் பகுதியில் கண்திறந்த கதிரவன்
இப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் சாலையோர தீபாவளிக்கு சாலையோரங்களில் கடை விரித்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தீபாவளி பண்டிகை நாளான கடந்த வியாழக்கிழமையும் சாரல் மழை பெய்தது. வீடுகளில் துவைத்த துணிகளை உலர வைக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்மட்டம் 113.59 அடியாக உயர்வு
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் வானத்தை சூழ்ந்திருந்த மழை மேகங்கள் விலகி கதிரவன் கண் திறந்ததால் வெயில் முகம் தெரிந்தது.
காலையிலேயே வெயில் சுல்லென அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழையைப் பார்த்து வந்த மக்களுக்கு இந்த வெயிலைப் பார்த்தது உற்சாகமாய் இருந்தது. இன்னும் சில நாள்களுக்கு இவ்வாறு தொடர்ந்து வெயில் அடித்தால் சேறும் சகதியுமாக உள்ள சாலைகள் காய்ந்து போக்குவரத்திற்கு தடை இல்லாத நிலை ஏற்படும்.
மேலும் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வெளியேறிவிடும். வீடுகளில மக்கள் துணிமணிகளை உலர வைப்பதற்கு இந்த வெயில் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் தெரிவித்தனர்.