தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி பதவியேற்றுக்கொள்கிறார்.
ஆர்.என். ரவி, 1976-கேரள பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. 2012-இல் மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன்பின்னா் 2019-இல் நாகாலாந்து ஆளுநராக பொறுப்பேற்றாா். நாகாலாந்து பிரிவினைவாதக் குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவாா்த்தையில் அவா் முக்கியப் பங்கு வகித்துள்ளாா்.
நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழகத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதையடுத்து செப்டம்பர் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் தற்போதைய ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நீட் தேர்வு தோல்வி பயத்தில் அரியலூர் மாணவி தற்கொலை