நீமுச்: மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில், 30 வயது பெண் காவலரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அதனை விடியோ எடுத்து மிரட்டியதாக ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து செப்டம்பர் 13ஆம் தேதி பெண் காவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் மற்றும் அவர்களது தாய உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளி மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால்.. குற்றவாளி, பெண் காவலருடன் முகநூலில் பழகியுள்ளார். பிறகு வாட்ஸ்ஆப் காலில் பேசியுள்ளார். பிறகு தனது இளைய சகோதரரின் பிறந்தநாள் விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிறந்தநாள் விழாவுக்கு வந்த பெண் காவலரை, மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
முக்கியக் குற்றவாளி மற்றும் அவரது இளைய சகோதரர், நண்பர் உள்பட 3 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த குற்றத்தை அவர்கள் விடியோவாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளனர். மேலும், குற்றவாளியின் தாய், இந்த விடியோவை வெளியே அனுப்பிவிடுவோம், குற்றத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று கூறி மிரட்டி பணம் பிடுங்கியுள்ளார். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவான மற்றவர்களைத் தேடும் பணி நடக்கிறது.