மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானம் தமிழக பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
முன்னதாக தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேசியதாவது:
'மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களும் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என பீடிகை போட்டு பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில்கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவது ஏற்புடையது அல்ல.
அனைத்து மாணவர்களுக்கும் இது சமமான வாய்ப்பினை வழங்கிடாது. தமிழகத்தில் 70% மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இந்த பொது நுழைவுத் தேர்வு முறை, பெரும்பான்மையானவர்களுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதனால் பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை குறையும்.
நீட் தேர்வைப் போன்றே, இதற்கும் மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும். இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள். எனவே, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு பொது நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்' என்று பேசினார்.