/

மானாமதுரை நகராட்சி வார்டுகளில் பணப்பட்டுவாடா தீவிரம்: வாக்காளர்கள் உற்சாகம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பணப்பட்டுவாடாவை ஆரம்பித்துள்ளதால் வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:22 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பணப்பட்டுவாடாவை ஆரம்பித்துள்ளதால் வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

பேரூராட்சியாக இருந்து நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரைக்கு முதல் முறையாக நகராட்சி அந்தஸ்தில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட 95 பேர் களத்தில் உள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்ததும் சுயேச்சைகள், அரசியல் கட்சியினருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து வார்டுகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டுகளில் பணப் பட்டுவாடாவைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் ஒரு ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்து வருகின்றனர். 

பணவசதி படைத்த வேட்பாளர்கள் மோதும் குறிப்பிட்ட ஒரு சில வார்டுகளில் ஒரு ஓட்டுக்கு ரூ 2000 வரை கொடுக்கப்படுகிறது. வேட்பாளர்கள் கூறுகையில் முதல் சுற்றாகத்தான் இந்தப் பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. பணவசதி படைத்த பணவசதி இல்லாத அனைத்து தரப்பினருக்கும் பணம் பட்டுவாடா செய்து வருகிறோம். எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் அடுத்தடுத்த சுற்றுகள் பணம் கொடுக்கும்போது நாங்களும் அதே போல் பணம் கொடுப்போம் என்றனர். இவ்வாறு வேட்பாளர்கள் போட்டிப் போட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதால் வார்டுகளில் உள்ள வாக்காளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

ஒவ்வொரு வார்டிலும் 80 முதல் 90 சதவீத வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. வெளியூரில் வசித்து வரும் வாக்காளர்களின் முகவரி தெரிந்து அவர்களது வீடுகளுக்குச் சென்று வேட்பாளர்கள் பணம் கொடுத்து ஆதரவு திரட்டி வருகின்றனர். வாக்காளர்கள் கூறுகையில் வேட்பாளர்கள் போட்டிப் போட்டு பணம் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் அவர்கள் தேர்தல் தேதி வரை பல சுற்றுகள் பணம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். 

வேட்பாளர்கள் ஒட்டுக்காக கொடுக்கும் பணம் ஏழை மக்களின் சிறுசிறு கடன்களை அடைக்கவும் பல தேவைகளுக்கும் பயன்படுகிறது என்றனர். பண வசதி படைத்த வேட்பாளர்கள் தங்களது வார்டுகளில் பணம் பட்டுவாடா செய்வதைப் பார்த்து பண வசதி இல்லாத வேட்பாளர்கள் போட்டியிடும் சில வார்டுகளில் வசிக்கும் மக்கள் பிற வார்டுகளில் கொடுப்பதைப் போன்று தங்களது வார்டு வேட்பாளர்களும் பணம் கொடுக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். 

பண வசதி இல்லாத வேட்பாளர்கள் கூறுகையில்... 

பணவசதி படைத்த வேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை தங்களால் கொடுக்கமுடியவில்லை  என்றாலும் எங்களால் முடிந்த அளவுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.500 ஆவது கொடுப்போம் என்றனர். ரூ.500 கொடுக்கும் வேட்பாளரிடம் வாக்காளர்கள் பிற வார்டுகளில் கொடுப்பதைப் போன்று எங்களுக்கும் அதிகமான தொகையைக் கொடுங்கள் எனக் கேட்டு வற்புறுத்துகின்றனர். மானாமதுரை நகராட்சியில் பணப்பட்டுவாடா மும்முரமாக நடந்து வருவதால் வீதிகளில் எங்குப் பார்த்தாலும் இதே பேச்சாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.