போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர் சடலமாக மீட்பு

போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர் சடலமாக மீட்பு
Updated on
1 min read

 
போடி: போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

போடியை சேர்ந்த குமரேசன் (32), கோகுல் (20), பாண்டியராஜன், தேனி சுக்குவாடன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (27) உள்ளிட்ட 14 பேர் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். 14 பேரும் பணி முடிந்து மாலையில் போடி அருகே ஊத்தாம்பாறை வனப்பகுதியில் சின்னாறு எனப்படும் ஊத்தாம்பாறை ஆற்று பகுதியில் குளிக்க சென்றுள்ளனர்.

ஆற்றின் ஒரு பகுதியில் குளிக்கும்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், குமரேசன், கோகுல், பாண்டியராஜன் ஆகியோர் தணணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றின் ஒரு கரையிலும், மற்ற 10 பேர் ஒரு கரையிலும் ஏறி தப்பித்தனர். ஆற்றின் நடுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுரேஷ் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.

இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றின் ஒரு கரையில் இருந்த குமரேசன், கோகுல், பாண்டியராஜன் ஆகியோரை கயிறு மூலம் மீட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுரேஷை இரவு 8 மணிவரை தேடியும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து புதன்கிழமை காலையில் தேடும் பணியைத் தொடர்ந்தனர். தீயணைப்புத் துறையின் கமாண்டோ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டபோது ஆற்றில் பாறைகள் நிறைந்த பகுதியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர் காவல்துறையில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போடி குரங்கணி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com