ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான பேரறிவாளன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க காலம் தாழ்த்தியதால், அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதையும் படிக்க | பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை...!
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவரும் அவரது தாயார் அற்புதம்மாளும், பேரரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் நேற்று பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பேரறிவாளன் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனது தாயார் அற்புதம்மாளுடன் சென்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பேரறிவாளன் விடுதலை குறித்து வைகோ, 'உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; எல்லையற்ற மகிழ்ச்சி. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதையும் படிக்க | பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு