
பென்னாகரம்: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு தொடா்ந்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையானது தளர்த்தப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலம், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதி, தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவந்த தொடா் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அண்மையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி கடந்த 18 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தடை விதித்திருந்தார். இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடை விடுமுறைக்காக ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் முற்றிலுமாக மழையின் அளவு குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து புதன்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு கடந்த ஒரு வாரமாக விதிக்கப்பட்டிருந்த தடையினை தருமபுரி மாவட்ட நிர்வாகம் தளர்த்தியுள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி மற்றும் சினி அருவிகளில் குளித்தும், மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து பார்வை கோபுரம், ஐந்தருவி, பெரிய பாணி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் உற்சாக பரிசலில் பயணம் மேற்கொண்டனர்.
மேலும், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வளத்துறை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.