பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக விவாதிக்க, உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்பொருட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், பாமகவின் பாலு, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.