தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சமா? ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வரும் தமிழக அரசு, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம்


தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வரும் தமிழக அரசு, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ந்தேதி வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த சில நாள்களிலேயே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை என்றால் அப்போதே தெரிந்திருக்கும்; அவ்வாறு தெரிந்திருந்திருந்தால் அப்போதே மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருக்கலாம். 

ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தப்படுகின்றன என்றால், அதற்கு காரணம் ஆசிரியர் பற்றாக்குறை அல்ல... வேறு ஏதோ ஒன்று தான். 
தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை தமிழக அரசு பெருமிதத்துடன் விளம்பரம் செய்து கொள்கிறது. 

இந்தத் திட்டங்களின் நோக்கம் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுவது தான். இதைத் தான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் செய்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு தான் தொழிற்கல்வி பாடப்பிரி வினருக்கு பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. 

தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம். இது கூடாது. 

மேல்நிலைக்கல்வியை முடித்தவுடன் பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பு பெறவும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான எளிய வழி தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தான். அவற்றை மூடி கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வெந்நீர் ஊற்றி அழித்து விடக் கூடாது. 

தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்தால், புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து பற்றாக்குறையை போக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com