ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்த நிலையில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் தாமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்தது.
இதையும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழக அரசு
அதனைத் தொடர்ந்து விசிக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. மேலும் நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பவில்லை எனக் குற்றம்சாட்டி தமிழக அரசின் சார்பில் முதல்வர் உள்பட யாரும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
இதையும் படிக்க | ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
இந்நிலையில் சென்னை ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் தாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிமுகவின் சார்பில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகியோரும், பாமக சார்பில் சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனும், பாஜக சார்பில் அண்ணாமலை, குஷ்பூ, வானதி சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.