மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்த உத்தரவு தமிழக ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் திடீரென மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்த்து, கடந்த ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் ரூ.7,500 ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்த ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றின் கணக்காளர், சமுதாய வல்லுநர்கள், சமுதாய வளப் பயிற்றுநர்கள் மற்றும் பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்கள் இவர்களில் முன்னுரிமை மற்றும் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்” பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிர்வாக தலைப்பிலிருந்து மாதம் ரூ.5000 வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் பல அத்தியாவசிய பணிகளையும், திட்டப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளை செவ்வனே செய்யுமளவு போதிய அலுவலர்கள் கிராம ஊராட்சிகளில் இல்லாமல் உள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தினை வலுப்படுத்தும் விதமாக பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்களாயிருந்து தற்போது வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளவர்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி கிராம ஊராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் விதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.