விழுப்புரம்: விழுப்புரம் அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 85-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், முட்டத்தூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் ஒருவர் குல்பி ஐஸ் விற்றுள்ளார். இதை கிராமத்திலுள்ள பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் வாங்கி சாப்பிட்டனர்.
இந்த நிலையில். நள்ளிரவில் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி - மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 பள்ளி மாணவ, மாணவியர் உள்பட 85 பேர் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் குல்பி ஐஸ் விற்ற கண்ணன் என்பவரை கஞ்சனூர் போலீசார் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.