திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு பகல்பத்து நிகழ்ச்சி சென்ற டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி நிறைவு பெற்றது.
இதில், ஒவ்வொரு நாளும் உற்சவப் பெருமாள் ராஜகோபாலசாமி பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து, வைகுண்ட ஏகாதேசி இராப்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று சனிக்கிழமை,பரமபத வாசல் திறப்பு என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 3.45 மணிக்குள் துலா லக்னத்தில் நடைபெற்றது.
அப்போது,உற்சவப் பெருமாள் ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
பின்னர், பரமபத வாசலை சுவாமி கடக்கும் போது, பக்தர்கள் கோஷம் எழுப்பி வழிப்பட்டனர்.
நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் கருடா சி.இளவரசன், அறங்காவலர் குழு உறுப்பின்கள் அ.முத்துமாணிக்கம், கே.கே.பி.மனோகரன், வெ. லதா, துரை.நடராஜன், செயல் அலுவலர் எஸ்.மாதவன், மண்டாகப் படித்தார் எஸ் .காமராஜ் மற்றும் கோயில் அலுவலர்கள், திரளான பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், சுவாமி சந்நதிக்கு வந்தபிறகு, பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர்.
இராப்பத்து நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.