/

கவச உடை அணிந்து செவிலியர்கள் போராட்டம்: கோட்டை நோக்கி பேரணி!

சென்னையில் இன்று கவச உடை அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :12 ஜனவரி 2023, 7:10 am

DIN

சென்னையில் இன்று கவச உடை அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோட்டை நோக்கி பேரணியாக செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியா்களாக நியமிக்கப்பட்டனா். 

கரோனா காலத்தில் பணியில் சேர்க்கப்பட்ட 6,000 ஒப்பந்த செவிலியர்களில் 3,000 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3,000 பேருக்கு பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், செவிலியர்களின் போராட்டம் 12 ஆவது நாளாக இன்று தொடர்கிறது. 

மேலும், சென்னையில் இன்று செவிலியர்கள் கவச உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்லவுள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.