கணவன்-மனைவி தற்கொலை: தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கந்து வட்டி காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கந்து வட்டி காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பிரகாஷ்-சரிதா
கந்து வட்டி காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பிரகாஷ்-சரிதா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த தம்பதியரான பிரகாஷ் அவரது மனைவி சரிதா கந்து வட்டி காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் செய்தவர் பிரகாஷ். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வைத்திருந்த காரின் செலவுகளுக்காக ஆரம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த தசரதன் மகன் ராஜா என்கிற முனுசாமி இடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கடனாக வாங்கி அதற்கு மாதம் கந்து வட்டியாக 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தார். கரோனா ஊரடங்கு காலத்தில் பிரகாஷால் வட்டி கட்ட இயலாத நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் ராஜா என்கிற முனுசாமி பிரகாஷிடம் அசல் மற்றும் வட்டியை கேட்டு மிரட்டியும், பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சரிதாவையும் தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார்.

மேலும், வியாழக்கிழமைக்குள் கடனை அசலுடன் ஒப்படைக்காவிட்டால், காரை பறிமுதல் செய்வததோடு, ஊர் கூட்டத்தில் வைத்து அசிங்கப்படுத்துவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சரிதாவும் விஷம் குடித்துள்ளனர். இதனை அறிந்த உறவினர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டு, இரண்டு நாட்கள் ஆன நிலையில் அதற்கு காரணமானவர்களை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்யவில்லை என்று குற்றம்சாட்டி பிரகாஷ் சரிதாவின் உறவினர்களும் பொதுமக்களும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள்.

இதனைத் தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்வதாகக் கூறி சமாதானப்படுத்தினர் .

இதனால் ஆரம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com