
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (அக். 2) நேரில் சென்று சந்தித்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து மத்திய பாஜகவுக்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை அளித்திருந்த நிலையில், அண்ணாமலை உடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அதிமுக உடனான கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க நேற்று இரவு தில்லி புறப்பட்டார் அண்ணாமலை.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து அவர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதோடு கூட்டணி முறிவு குறித்தும் அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.
இதனிடையே சென்னை திரும்பாமல் தில்லியிலேயே அண்ணாமலை தங்கியிருந்தார். பாஜகவின் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் நாளை நடைபெறுவதாக இருந்தது.
அண்ணாமலை தில்லியிலிருந்து சென்னை திரும்பாததால், இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, மாநில தலைவர் அண்ணாமலை, நேரில் சென்று சந்தித்தார். இதனால் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.