கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 1,066 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்கள், தாழ்வான பகுதியில் வசிப்போர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்புப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை மழை பெய்து வருகிறது.
இதனால், கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 20 ஆம் தேதி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 455 கன அடியாக இருந்தது, 21 ஆம் தேதி, வினாடிக்கு 645 கன அடியாக அதிகரித்தது, வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,066 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனையை நுகா்வோா் விரும்பவில்லை: ஆவின்
அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் கொள்ளளவு 52 அடியாகும். தற்போது, கிருஷ்ணகிரி அணையின் மட்டம் 50.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து வினாடிக்கு 1,066 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர் வெளியேற்றம் அதிகரிப்பு குறித்து, தென்பெண்ணை ஆறு பாயும் தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆறு பாயும் ஆற்றங்கரை ஓரத்திலும், தாழ்வான பகுதியில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர்.