
இந்திய ரயில்வே
சென்னை: சென்னை முதல் பெங்களூரு மற்றும் இன்னும் சில இடங்களுக்கு ரயிலில் செல்லும் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள் குறையப்போகிறது.
அதாவது, அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையேயான 144 கிலோ மீட்டர் ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் தற்போதைய மணிக்கு 110 கிலோ மீட்டரிலிருந்து மணிக்கு 130 கிலோ மீட்டர் ஆக அதிகரிக்கப்படுகிறது.
இந்த ரயில்பாதையில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு, சிக்னல்கள் மேம்படுத்தப்பட்டிருக்கும் காரணத்தால், தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஏற்கனவே சென்னை - அரக்கோணம் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு, வேகம் அதிகரிக்கப்பட்ட நிலையில், அரக்கோணத்திலருந்து ஜோலார்பேட்டை இடையேயான வழித்தடமும் அதிகரிக்கப்படுகிறது.
இதையும் படிக்க.. கையின் கட்டைவிரலானது கால் விரல்: மருத்துவர்கள் சாதனை
இந்த வேக அதிகரிப்பால், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் ரயில்களின் ஒட்டுமொத்த பயண நேரம் 4.25 நிமிடங்களாகவும், வந்தேபாரத் ரயிலுக்கு 4 மணி நேரமாகவும் குறையக்கூடும். ஏற்கனவே 5.30 மணி நேரம் அல்லது 6 மணி நேரம் என்று சதாப்தி மற்றும் பிருந்தாவன் விரைவு ரயில்கள் இயங்கி வந்த நிலையில், இனி பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பணிகள் முடிந்து, லோகோ பைலட்டுகளுக்கும் ரயில்வே சார்பில் அறிவுறுத்தல் அனப்பப்பட்டு, 124 ரயில்கள் அடுத்த வாரத்திலிருந்து மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படவிருக்கிறது.
இதனால், பெங்களுரு, கோவை, திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லும் பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், சென்னை முதல் பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளின் பயண நேரத்துக்கு இந்திய ரயில்வே போட்டிபோடும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...